Monday, September 27, 2010

VINAAYAGAR AGAVAL - POEM ON GANAPATHI

விநாயகர் அகவலை நாம் பெரும்பாலும் படித்திருப்போம்.   "தாத்தா - எனக்குத் தெரியும் சீதக் களபச் செந்தாமரை என்று துவங்குமே அந்தப் பாடல் தானே.   நான் அதை பாடலாகக் கேட்டிருக்கிறேன்" என்றான் சூரியா.  சரி யார் அதைப் பாடியது தெரியுமா?  "தாத்தா சீர்காழி கோவிந்தராஜன்" என்றான் சூரியா.   இல்லை.  அந்தப் பாடலை இயற்றியவர் ஒளவையார்.  அது இயற்றப்பட்ட காரணம் - நேரம் பற்றி எல்லாம் இன்றைக்கு ஒரு வலைத்தளத்தில் படித்தேன்.  நன்றாக இருந்தது.   உங்களுக்குச் சொல்கிறேன்.  விநாயகரே அவ்வையார் முன் நேரில் தோன்றி, அவரைப் பாடும் படி சொல்லி, கேட்டு தலையாட்டிய பாடல் இது.
சுந்தரர் கைலாயதிற்குப் புறப்பட வேண்டிய நேரம் வந்தது.  வானத்தில் இருந்து ஐராவதம் என்னும் யானை வந்து அவரைச் சுமந்து சென்றது.  அப்போது சுந்தரர் இருந்தது சேர மன்னனுடன்.  சேர மன்னன் உடனே ஐந்தெழுத்தை தனது குதிரையின் காதில் ஓதினான்.  குதிரையும் பறந்தது.  சேர மன்னன் குதிரை மேல் சென்றான்.  அப்போது அவர்கள் ஒளவையாரை வானத்தில் இருந்து பார்த்தார்கள்.  நீங்களும் வருகிறீர்களா என்று கேட்டார்கள். "இல்லை நான் வினாயகருக்ககப் பாட்டு பாடிக் கொண்டிருக்கிறேன்."  என்று பதில் கூறிவிட்டார்கள் ஒளவையார்.  பாட்டு முடிந்தவுடன் விநாயகர் "நீங்கள் கைலாயம் போக விருப்பமா?" என்று கேட்டார்.  "தங்கள் தந்தையைப் பார்க்க யாருக்குத் தான் விருப்பன் இருக்காது?" என்றார் ஒளவையார்.  உடனே அடுத்த கணமே அவர்கள் கைலாயம் அடைந்தார்கள்.  சேர மன்னனும் சுந்தரரும் கைலாயம் வரும்போது அவ்வையார் அங்கே இருந்ததைக் கண்டார்கள்.  மலைத்துப் போனார்கள்.  கணபதி நினைத்தால் எதுவும் நடக்கும்.   நாமும் கணபதியைப் போற்றுவோமா? 

கற்பக கணபதியே
பிள்ளையார் பட்டியில் உறைநிதியே!
சொற்பதம் கடந்தவனே
உந்தன் பொற்பதம் பணியவந்தோம்!
ஆறடி உயரத்திலே
அதி யற்புத வடிவத்திலே
கோதறு குணத்தினிலே
வளர் பார்புகழ் கணபதியே!
கல்லினால் ஆனவனே
கருணையில் கரும்பென இனிப்பவனே!
புல்லினால் பூஜித்தாலும்
அகம் மிகமகிழ்ந் தருள்பவனே!
உமையவள் திருமகனே
எம்மை இமையென காப்பவனே!
குறைகளை தீர்ப்பவனே
எங்கள் சுமைகளை ஏற்பவனே!
வலம்புரி நாயகனே
பழம்பெற இறைவலம் வந்தவனே!
மறைகளின் அதிபதியே
எங்கள் மனம்அமர் குணநிதியே!
 "தாத்தா விநாயகர் அகவலை நான் படிக்க வேண்டும் தாத்தா. என்னிடம் இல்லை " என்றான் சாய் அர்ஜுன்.  "இந்தப்பா இதை வாங்கிப் படி" என்றார் தாத்தா.  நீங்களும் படித்து மகிழுங்கள்.
 
சீதக் களபச் செந்தா மரைப்பூம்
   
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
   
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
   
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
   
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்

   
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
   
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
   
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
   
நான்ற வாயும் நாலிரு புயமும்
   
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

   
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
   
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
   
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
   
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
   
முப்பழ நுகரும் மூஷிக வாகன!

   
இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
   
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
   
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
   
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
   
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து

   
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
   
திருவடி வைத்துத் திறமிது பொருளென
   
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
   
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
   
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்

   
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
   
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
   
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
   
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
   
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து

   
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
   
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
   
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
   
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
   
ஆறா தாரத்(து) அங்குச நிலையும்

   
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
   
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
   
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
   
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
   
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்

   
குண்டலி யதனிற் கூடிய அசபை
   
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
   
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
   
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
   
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

   
குமுத சகாயன் குணத்தையும் கூறி
   
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
   
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
   
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
   
எண் முகமாக இனிதெனக் கருளிப்

   
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
   
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
   
கருத்தினில் கபால வாயில் காட்டி
   
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
   
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து

   
முன்னை வினையின் முதலைக் களைந்து
   
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
   
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
   
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
   
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில்

   
எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
   
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
   
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
   
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
   
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்

   
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
   
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
   
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
   
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
   
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்

   
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
   
வித்தக விநாயக விரைகழல் சரணே!
"தாத்தா நாமும் ஐந்தெழுத்தை ஓதினால் இப்படி வானில் பறக்க முடியுமா?" என்றான் சூரியா.  "முயற்சி திருவினை ஆக்கும்" என்றார் தாத்தா.   அப்படியும் ஒரு காலம் வரும் சூரியா.

No comments:

Post a Comment